"வேற்றுமையில் வல்லினம் மிகுதலும், மிகாமையும்"
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் 'பொருளை' வேறுபடுத்துவது 'வேற்றுமை' எனப்படும். வேற்றுமையில் 'உருபு' முதன்மையானதன்று; பொருளே முதன்மையானது.
இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்திருப்பது 'தொடர்' எனப்படும். தொடரென்பது ஒருசொல் தன்மையது. தொடரை அவசியமான காரணமின்றி அதாவது பொருள்தெளிவுக்கன்றிப்-பிரித்தல் கூடாது.
இரண்டாம் வேற்றுமைத்தொகை
இரண்டாம் வேற்றுமைத்தொகையானது ஆறு பொருள்களில் வரும்.
*ஆக்கல்
*அழித்தல்
*அடைதல்
*நீங்கல்
*ஒத்தல்
*அடைதல்
சிலையைச்செய்தான்.(ஆக்கல்)
எதிரியைக்கொன்றான்.(அழித்தல்)
சென்னையை அடைந்தான். (அடைதல்)
ஊரைக்கடந்தான்.(நீங்கல்)
குமரனைப்போன்றவன் முகமது. (ஒத்தல்)
செல்வத்தைப்பெற்றான். (உடைமை)
ஒருதொடரில் வேற்றுமையுருபு வெளிப்பட்டுவந்தால், அது 'வேற்றுமை விரிநிலைத்தொடர்' எனப்படும்
சான்று:புத்தகத்தைப்படித்தான்
ஒருதொடரில் வேற்றுமையுருபு மறைந்து(தொக்கி) வந்தால், அது 'வேற்றுமைத்தொகைநிலைத்-தொடர்' எனப்படும். (சான்று; சிலைதிறப்பு. )தொகையை எக்காரணம் கொண்டும் பிரிக்கக்கூடாது. ஒருதொடரில் வேற்றுமையுருபும் பயனும் மறைந்துவந்தால் அது, 'வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை' எனப்படும். (சான்று:தயிர்க்குடம்-தயிரை உடைய குடம்)
இருசொற்கள் புணருவதாலே வல்லினம் மிகுகிறது. புணர்ச்சியினால் தோன்றிய ஒற்றினை நிலைமொழியின் ஈற்றில் நிறுத்திவிட்டு, புணர்ந்த வருமொழியை பிரித்து தனிச்சொல்லாக எழுதுவது, பொது இலக்கணத்திற்கும், புணர்ச்சியிலக்கணத்திற்கும் முரணானது என்பதை நினைவில் நிறுத்துக.(தயிர்க் குடம் - எனப்பிரித்து எழுதுவது தவறு. தயிர்க்குடம் என இணைத்தே எழுதவேண்டும்)
இரண்டாம் வேற்றுமையின் பொருள் 'செயப்படுபொருள்' இது எழுவாயை, செயப்படுபொருளாக மாற்றுகிறது.இதன் வேற்றுமையுருபு "ஐ" என்றவொன்றே. "ஐ" என்னும் எழுத்துரு வெளிப்பட்டு வராது. ஐகாரத்தின் உயிர்மெய்யானது, சொல்லின் ஈற்றில்வரும். இரண்டாம் வேற்றுமை வினைச்சொல்லைமட்டுமே ஏற்கும். அதாவது, வினைச்சொல்லுடன்மட்டுமே புணரும்; அப்புணர்ச்சி காரணமாக வல்லினம் மிகும். இரண்டாம்வேற்றுமையருபை அடுத்து, பெயர்ச்சொல் வரலாம்; ஆனால், புணராது.
(சான்று: ஓவியத்தை கண்ணன் வரைந்தார்)
* "குமரா, தண்ணீர்குடி". 'தண்ணீர்குடி' என்னுந்தொடர் 'இரண்டாம்வேற்றுமைத்தொகை' ஆகும். ஏனெனில், இடையில் ஐ-உருபுமறைந்துள்ளது.வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகவில்லை என்பதைக்காண்க. எனவே,இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
* "குமரன் தண்ணீரைக்குடித்தான்". இதில் இரண்டாம்வேற்றுமையுருபு "ஐ" வெளிப்பட்டு வந்துள்ளதைக்காண்க. அதனால் ககரவொற்று (க்) மிகுந்தது. எனவே, இரண்டாம் வேற்றுமைவிரியில் வல்லினம் மிகும்.
"தயிர்க்குடம்". இதன்பொருள் 'தயிரை உடைய குடம்' என்பதாம். இதில் "ஐ" உருபும், உடைய என்ற பயனும் மறைந்துவந்துள்ளன. ஆகவே, இது 'இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை' ஆகும். இதில் ககரவொற்று (க்) மிகுந்துள்ளதைக்காண்க. எனவே, இரண்டாம்வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக