சனி, 22 மே, 2021

மூன்றாம் வேற்றுமையில் வல்லினம் மிகுதல்

 மூன்றாம் வேற்றுமையும் வல்லினம் மிகுதலும் 

மூன்றாம் வேற்றுமையானது மூன்று பொருள்களில் வரும்.

               *கருவிப்பொருள் 

               *கருத்தாப்பொருள் 

               *உடனிகழ்ச்சிப்பொருள்


ஆல்,ஆன்,ஒடு,ஓடு என்பன மூன்றாம் வேற்றுமையுருபுகள்.இதில் ஆல்,ஆன் உருபுகள் கருவிப்பொருளுக்கும்,கருத்தாப்பொருளுக்கும் வருவன. ஒடு,ஓடு உடனிகழ்ச்சிப்பொருளுக்கு வருவன.

சான்று

எழுதுகோலால் எழுதினேன்(கருவிப்பொருள்- ஆல் உருபு)

வாளான் வெட்டினான்(கருவிப்பொருள்-ஆன் உருபு) ஆன் உருபுப்பயன்பாடு தற்காலப் பயன்பாட்டில் இல்லை.இது செய்யுள் நடையில் வரும்.

சான்று:புறந்தூய்மை நீரான் அமையும்

கருத்தாப்பொருள்

             *இயற்றுதல் கருத்தா 

             *ஏவுதல் கருத்தா 

என இருவகைப்படும்.

சிற்பியால் சிலை செதுக்கப்பட்டது.(இயற்றுதல் கருத்தா) இதில் செயலைச்செய்பவன் சிற்பி.

கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது(ஏவுதல் கருத்தா) இதில் கரிகாலன் செயலைச்செய்யவில்லை. செயலைச்செய்ய  ஏவுகிறான்.

இத்தகைய கருத்தாப்பொருளுக்கு ஆல்,ஆன் உருபுகளே வரும். 

மன்னனான் கோவில் கட்டப்பட்டது.(ஆன் உருபு)

ஆன்-உருபு தற்காலப்பயன்பாட்டில் இல்லை.

இராமனோடு சீதையும் வந்தாள்(உடனிகழ்ச்சிப்பொருள்)

'வந்தாள்' என்ற பயனிலை சீதைக்கு மட்டும் உரியது. இந்த நிகழ்வில் இராமனும் உடன் இணைந்ததால்,உடனிகழ்ச்சிப்பொருள் பெற்றது.

உடனிகழ்ச்சிப்பொருள் ஒடு,ஓடு உருபுகளைப்பெறும்.

குதிரையொடு குட்டியும் வந்தது(ஒடு உருபு) 

தற்காலத்தில் ஓடு உருபு பயன்படுத்துமளவு ஒடு உருபைப்பயன்படுத்துவதில்லை.

ஆல்,ஆன்,ஒடு,ஓடு  உருபுகளைத்தவிர சில சொற்களும் உருபுகளின் தன்மைபெறும்.இவற்றை 'சொல்லுருபுகள்' என்பர்.

கொண்டு,உடன் என்பவை மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகும்.

தற்காலத்தில் கூட, வைத்து உருபுகளும் பயன்படுத்தப்படுகிறது.

வாள்கொண்டு வெட்டினான்.

ஆசிரியருடன் மாணவர்கள் வந்தனர்.

கத்திவைத்து அறுத்தான்.

கண்ணன்கூட நானும் வந்தேன்.

மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

கைதொழுதான்-இது கையால் தொழுதான் என்று இருக்க வேண்டும். இங்கே 'ஆல்' உருபு மறைந்து வந்துள்ளது. எனவே ,இது மூன்றாம் வேற்றுமைத்தொகை. இது போன்ற, மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

மூன்றாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

கையால் தொழுதான். 

மரத்தால் செய்தான்.

இதில் மூன்றாம் வேற்றுமை உருவானது வெளிப்பட்டு நிற்கிறது. மறையாமல் வெளிப்பட்டு நிற்பதால், இதனை வேற்றுமை விரி என்கிறோம். இது போன்ற மூன்றாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

மரச்சிலை - மரத்தால் ஆன சிலை

இதில் 'ஆல்' என்ற மூன்றாம் வேற்றுமை உருபும், 'ஆன' என்ற பயனும் மறைந்திருக்கிின்றன. எனவே, இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை எனப்படும்.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

சான்றுகள்:

வெள்ளிக்கிண்ணம், மரப்பெட்டி 

வேற்றுமைத்தொடர்-2 

இராம்முருகன்




கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...