உடம்படுமெய்ப்புணர்ச்சி
------------------------------------------++
இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியின் இறுதி யெழுத்தாக உயிரெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தாக உயிரெழுத்தும், இருந்தால் இந்த இரண்டு சொற்களும் இணையாது. இணையாத இரண்டு உயிரெழுத்துக்களை இணைத்து வைக்கும் பொருட்டு, உடன்படுத்தும் பொருட்டு ய்,வ் என்ற இரண்டு மெய்யெழுத்துகள் தோன்றும். இவ்வாறு இணையாத எழுத்துக்களை உடன்படுத்துவதற்காக தோன்றக்கூடிய இந்த இரண்டு மெய்யெழுத்துகளையும் 'உடம்படுமெய்யெழுத்துகள்' என்று வழங்குவர்.
"இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும்;ஏ முன் இருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்."
அதாவது நிலை மொழி இறுதியில் இ,ஈ,ஐ எழுத்துகள் வந்து, வருமொழியின் முதல் எழுத்தாக உயிரெழுத்துகளில் பன்னிரண்டு எழுத்துகளில் ஏதேனும் ஒன்று வந்தால், இந்த இரண்டு சொற்களும் இணையும்போது இடையில் 'யகர' மெய் தோன்றும்.சான்று: மணி+அடித்தது-(மணி+ய்+அடித்தது)-மணியடித்தது.(மணி-மண்+இ)
தீ+எரிந்தது-(தீ+ய்+எரிந்தது)-தீயெரிந்தது(தீ-த்+ஈ)
வேலை+எறிந்தான்-(வேலை+ய்+எறிந்தான்)-வேலையெறிந்தான்(லை-ல்+ஐ)
இ, ஈ ,ஐ இந்த மூன்று உயிர்களைத்தவிர்த்துப்பிற உயிரெழுத்துகள் வந்தால் 'வகரமெய்' தோன்றும்.
சான்று:கோ+இல்-(கோ+வ்+இல்)-கோவில்
நிலைமொழியின் இறுதியில் 'ஏ' வரின் யகரமெய்யும், வகரமெய்யும் தோன்றும்.
சான்று: சே+அடி-சேயடி,சேவடி.
-புணர்ச்சித்தொடர் 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக