ஞாயிறு, 21 ஜனவரி, 2024

வேற்றுமை

சொல்லிலக்கணத்தின் இன்றியமையாத பகுதியான வேற்றுமையினை பல்வேறு கூறுகளாக இத்தொடரில் காணவிருக்கிறோம். 

1. வேற்றுமையின் வகையும் தன்மையும்
2. வேற்றுமை ஏற்கும் பொருள்
3. வேற்றுமையின் முடிக்கும் சொல்
4. வேற்றுமையில் வலிமிகுமிடங்கள்
என்னும் நான்கு பொருண்மையில் வேற்றுமை குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்துகொள்வோம்.

வேற்றுமை என்றால் என்ன? 

பெயர்ச்சொல்லின் இறுதியில் நின்று பெயர்ச்சொல்லின் தன்மையை வேறுபடுத்திக்காட்டுவதே வேற்றுமை எனப்படும்.

வேற்றுமை எட்டு வகைப்படும்
எழுவாய் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை (ஐ)
மூன்றாம் வேற்றுமை(ஆல்)
நான்காம் வேற்றுமை(கு)
ஐந்தாம் வேற்றுமை(இன்)
ஆறாம் வேற்றுமை(அது)
ஏழாம் வேற்றுமை(கண்)
விளிவேற்றுமை. 

வேற்றுமைகளுக்குரிய உருபுகள்

ஐ ஆல் கு இன் அது கண் ஆகியவை இரண்டுவேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறுவேற்றுமைகளுக்குரிய உருபுகளாம்.
எழுவாய்வேற்றுமைக்கும் விளிவேற்றுமைக்கும் தனித்த உருபுகள் இல்லை. 

எழுவாய் வேற்றுமை

எழுவாய் வேற்றுமைக்கு தனித்த உருபுகள் இல்லையெனினும் திரிபில்லாத பெயர்ச்சொல் தன்னுடைய பொருளை வினைமுதல்பொருளாக வேறுபடுத்துவதால் இதனை எழுவாய் வேற்றுமை என்பர்.

முருகன் - திரிபில்லாத இயல்பான பெயர்ச்சொல். தன்னளவில் எந்தச்செயலையும் நிகழ்த்தவில்லை 

முருகன் வந்தான். - இத்தொடரில் 'முருகன்' என்னும் பெயர்ச்சொல் 'வந்தான்' என்னும் பயனிலையையேற்று வினைமுதற்பொருளாகிறது. அதாவது வருதல் என்னும் தொழிலைச்செய்யும் வினைமுதலாகிறது. 

வினைமுதல், செய்பவன், கருத்தா இம்மூன்றும் ஒருபொருள் தருவன.

முருகன் என்னும் பெயர்ச்சொல் எழுவாய்த்தொடராகும்போது ஒருசெயலைச்செய்யும் கருத்தாவாக மாறுகிறது. இப்பொருள் மாற்றமே முதல்வேற்றுமை அல்லது எழுவாய்வேற்றுமையாகும். பெயரின் தன்மையை வேறுபடுத்தலால் இதற்கு பெயர்வேற்றுமை என்னும் பெயருமுண்டு .
எழுவாய் வேற்றுமையின் முடிக்குஞ்சொல்
எழுவாய் வேற்றுமையானது வினை பெயர் வினா இம்மூன்றையும் பயனிலையாகக்கொண்டு முடியும். 

சான்று
முருகன் நல்லவன் (பெயர்)
முருகன் வந்தான் (வினை)
முருகன் யார்? ( வினா)

சனி, 13 ஜனவரி, 2024

அசைபிரித்தலில் குற்றியலிகரம் அலகு பெறுமா?

 அசைபிரித்தலில் குற்றியலிகரம் அலகு பெறுமா?


குற்றியலிகரம் என்றால் என்ன? 


குற்றியலுகரம் நிலைமொழியாய் நிற்க வருமொழியில் யகரம் வரின் நிலைமொழியீற்றுகரம் இகரமாய்த்திரியும் இதனையே குற்றியலிகரம் என்போம். 


அலகிடுதலில் பலரும் இதனை குறிலெழுத்தாகக்கொண்டு அலகிடுகின்றனர் இதனால் பிழை நேர்கிறது. 


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல் என்னும் குறட்பாவை அலகிடும்போது தடுமாறுகின்றனர்.


இக்குறளில் இரண்டாவது சீர் மூன்றாவது சீர் அசைபிரிப்பில் குழப்பம் வருகிறது.


வாய்/மை - தேமா

எனப்/படு/வது- நிரை நிரை நிரை -கருவிளங்கனி 

யா/தெனின்/- கூவிளம்


இப்படிப்பிரிக்கின்றனர். இதிலுள்ள பிழைகள்

    • கனிச்சீர் வெண்பாவிற்குரிய சீரன்று. 

    • குறள் எழுதப்பட்ட வடிவம் தவறு.


எனப்படுவது-குற்றியலுகரம் 

யாதெனின் - வருமொழி முதலில் யகரம்


எனவே, குறளைச் சரியான வடிவில் முதலில் எழுதுக.


வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்.


வாய்/மை- தேமா

எனப்/படு/வ- நிரை நிரை நேர் - கருவிளங்காய்

தியாதெனின் - நிரை நிரை - கருவிளம் 


இப்போதும் அசைபிரித்தலில் குழப்பமே 


இரண்டாம் சீர் - காய்

மூன்றாம் சீர்- நிரையில் தொடங்குகிறது.


காய்முன்நேர் மட்டுமே வெண்பாவில் வரும். 


இதனை எவ்வாறு சரிசெய்வது? 


தொல்காப்பியரை நாடுவோம். 


தொல்காப்பியச்செய்யுளியலில் எட்டாவது நூற்பா இதற்கான தெளிவைத்தருகிறது. 


'ஒற்றெழுத் தியற்றே குற்றியலிகரம் ' 


குற்றியலிகரமானது ஒற்றைப்போன்றும் எழுத்தைப்போன்றும் ஈரியல்பு கொண்டது. 

(எழுத்து - குறிலெழுத்து)


அசைபிரித்தலில் குற்றியலிகரமானது ஓரிடத்தில் ஒற்றைப்போன்று அலகுபெறாமலும் மற்றோரிடத்தில் குறிலெழுத்தைப்போன்று அலகுபெற்றும் வரக்கூடிய ஈரியல்பு கொண்டது.


வாய்/மை- தேமா

எனப்/படு/வ- நிரை நிரை நேர் - கருவிளங்காய்

(தி)யாதெனின் - நேர் நிரை - கூவிளம் 


இதில் குற்றியலிகர எழுத்தான (தி) ஒற்றைப்போன்று அலகுபெறாமல் வரும்.


இப்போது சரியாக அசைபிரிப்பு அமைந்துள்ளது.



அலகுபெற்று வருமிடம்


கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி யாங்கே கெடும்.   


இக்குறளில்


நீடின்று-குற்றியலுகரம் 

யாங்கே - வருமொழி முதலில் யகரம்


குற்றியலிகரமாகி 'நீடின்றி'என்றானது.


நீ/டின்/றி-தேமாங்காய்


யாங்/கே -தேமா


தளை - காய் முன் நேர்


இவ்விடத்து குற்றியலிகரம் குறிலைப்போன்று அலகு பெறுகிறது. 


இந்த நுட்பத்தையறிந்து மாணவர்களுக்குக்கற்பிக்கவேண்டும்.


என்றும் அன்புடன்

இரா.முருகன்

தமிழாசிரியர்

அரசூர்

8012906557

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...