தமிழ் செழுமையுற வேண்டுமெனில் அங்காடிகள், வணிகநிறுவனங்கள், விற்பனை செய்யப்படும் பொருள்களின் பெயர்கள் தமிழிலேயே இருக்கவேண்டும்.
அதுவும் பிழையற்றதமிழில் அமைவது நலம்.
பிழையின்றி எழுதுவதற்கு தமிழ்இலக்கணம் இன்றியமையாதது.இன்றைய பதிவில் அப்படியொரு பெயரை அறிந்து கொள்ளலாமா?
தேனீர்க்கடை/தேநீர்க்கடை
இவ்விரண்டு பெயரில் எதுசரியென
புணர்ச்சிவிதிப்படி அறிவோம்.
தேனீர் - இச்சொல்லைப்பிரித்தால் தேன்+நீர் எனப்பிரியும்.
தனிக்குற்றெழுத்தைச்சாராத னகர,ணகரங்கள் முன் நகரமெய் வருமிடத்து திரிந்து இருவழியினுங்கெடும்.
இப்போது விளக்கமாகப்பார்க்கலாம்.
தேன்+நீர்
தேன்+(ந்+ஈ)ர்
தேன்+(ன்+ஈ)ர் (ந்,ன் ஆக திரிந்தது)
தே+னீர் (நிலைமொழியீறு கெட்டது)
தேனீர்.
மேற்கூறிய விதிப்படி,
நகரமெய் திரிந்து இருவழியினுங்கெட்டது.
இப்புணர்ச்சியின்படி தேன்கலந்த நீரையே 'தேனீர்' எனல் வேண்டும்.
தேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது.
'தே' என்னுஞ்செடியின் இலையைப்பக்குவப்படுத்தி வடிக்கும் நீரே தேநீராகும்.
தே+நீர் - தேநீர் (Tea)
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
தேநீர்க்கடை என்பதே சரியான பெயராகும்.
அங்காடிகளின் பெயரைச் சரியான தமிழில் எழுதுவோம்.
ஆக்கமும் இடுகையும்
இராம்முருகன்
ம.ரெட்டியபட்டி.
விருதுநகர் மாவட்டம்