செவ்வாய், 30 ஜூலை, 2024

பதினோராம் வகுப்பு இயல்1

                             இயல்1

குறுவினாக்கள்

1. பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

விடை :

எழுத்துமொழி - எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது.

பேச்சுமொழி - முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.

அதனால் பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்திமிக்கதாக உள்ளது.

=====================================

2. என் அம்மை, ஒற்றியெடுத்த

நெற்றிமணி அழகே!

வழிவழி நினதடி தொழுதவர்,

உழுதவர், விதைத்தவர்

வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவளே! - இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

விடை :

வினையாலணையும் பெயர்கள்: தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்.

=====================================

3. 'பாயிரம்' பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

விடை :

❖ நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பு

❖ அந்நூல் வழங்கும் கருத்துவளம்.

❖ இவ்விரண்டினையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

❖ பாயிரம்: பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.

=====================================

4. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?

விடை :

❖ உயிரெழுத்து = உயிர் + எழுத்து - ர், மெய்யீறு

❖பன்னிரண்டு = பத்து + இரண்டு - த் + உ, உயிரீறு

❖ திருக்குறள் = திரு + குறள் - ர் + உ, உயிரீறு

❖ நாலடியார் = நான்கு + அடியார் - க் + உ, உயிரீறு

=====================================

5. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

விடை :

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை. இதுவே, இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையாகும்.

=====================================

சிறுவினா

1. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

விடை :

❖ என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே.....,

❖ காலம் காலமாகத் தமிழன்னையைப் போற்றியவர்கள்,

❖ சங்கம் அமைத்து தமிழன்னையைப் பாடியவர்கள்,

❖ தமிழ்ப்பயிர் வளர அயராது உழைத்தவர்கள்,

❖ இவ்வாறு தமிழ்மொழி வளர இடைவிடாது உழைத்தவர்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடத்தான் வேண்டும்.

❖ காற்றில் ஏறி ஒலிக்கின்ற கடலையும், நெருப்பாறுகளையும், மலைச்சிகரங்களையும் கடந்து செல் என்னும் ஒரு பாடலையும்,

❖ கபாடபுரங்களைக் கடல் விழுங்கிய பின்னரும் காலத்தால் அழியாத தொன்மையான இலக்கிய வலிமையெலாம் சேர்த்துப் பாடத்தான் வேண்டும் என்று சு. வில்வரத்தினம் குறிப்பிடுகிறார்.

=====================================

2. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் கூறுவன.

❖ நூலின் இயல்பு

❖ மாணவர் இயல்பு

❖ ஆசிரியர் இயல்பு

❖ கற்கும் முறை.

❖ கற்பிக்கும் முறை

❖ நூலாசிரியர் பெயர்.

❖ நூல் பின்பற்றிய வழி.

❖ நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு,

❖ நூலின் பெயர்.

❖ தொகை, வகை, விரி என்பனவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு,

❖ நூலில் குறிப்பிடப்படும் கருத்து.

❖ நூலைக் கேட்போர்.

❖ நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்.

ஆகிய செய்திகள் முகவுரையில் இடம்பெறவேண்டும்.

=====================================

3. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவீர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக,

விடை :

❖ தொன்மையான மொழி.

❖ உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி.

❖ இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய மொழி.

❖ பொருள் இலக்கணம் கூறும் மொழி.

❖ ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி’. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது தமிழ்மொழி.

❖ ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதியால் பாராட்டப்பெற்ற தமிழ்மொழி.

❖ 'உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே' என்று பாரதிதாசனால் பாடப்பெற்ற தமிழ்மொழி. இவை யாவும் தமிழ்மொழிமேல் நாங்கள் கொண்டுள்ள பற்றாகும்.

=====================================

4. மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.

விடை :

❖ மொழி முதல் எழுத்துகள் மொத்தம் - 22

❖ உயிர் எழுத்துகள் அ முதல் ஒள வரை - 12

எ.கா: அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊஞ்சல், எறும்பு, ஏணி, ஐந்து, ஒட்டகம், ஓடம், ஒளவை.

❖ க ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ் (மெய்யெழுத்துகள்) - 10

எ.கா: கப்பல், ஙனம், சக்கரம், ஞமலி, தண்ணீர், நண்பன், பந்து, மருத்துவம், யவர், வரம்.

❖ மொழி இறுதி எழுத்துகள் மொத்தம் - 24

உயிரெழுத்து - 12, மெய்யெழுத்து - 10, குற்றியலுகரம் -1.

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.

எ.கா: சில(அ), நிலா(ஆ), நரி(இ), தீ(ஈ), மிளகு(உ), பூ(ஊ), சேஎ(எ), எங்கே(ஏ), மழை(ஐ), நொ(ஒ), மலரோ(ஓ), கௌ(ஔ)

மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொன்றும் சொல்லின் இறுதியில் வரும்.

எ.கா: மெல்லின மெய் - உரிஞ், பெண், வெரிந், அறம், மான்.

இடையின மெய் - பொய், பால், தெவ், பாழ், வாள்.

பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும், சொல்லின் இறுதியில் வருவதாகச் சேர்த்துக் கொள்வர்.

எ.கா: எஃகு - குற்றியலுகரம் ஈறாயிற்று.

=====================================

நெடு வினா

நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

விடை :

பாயிரம்:

❖ நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பு.

❖ அந்நூல் வழங்கும் கருத்து வளம்.

❖ இவ்விரண்டினையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரம் ஆகும்.

❖ பாயிரமானது பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.

பொதுப்பாயிரம்:

❖ நூலின் இயல்பு

❖ மாணவர் இயல்பு

❖ ஆசிரியர் இயல்பு

❖ கற்கும் முறை.

❖ கற்பிக்கும் முறை.

என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.

சிறப்புப்பாயிரம்:

❖ நூலாசிரியர் பெயர்.

❖ நூல் பின்பற்றிய வழி.

❖ நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு,

❖ நூலின் பெயர்.

❖ தொகை, வகை, விரி என்பனவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு,

❖ நூலில் குறிப்பிடப்படும் கருத்து.

❖ நூலைக் கேட்போர்.

❖ நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்.

ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.

====================================


கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...