அசை பிரித்தலில் ஆய்தம் அலகு பெறுமா?
எழுத்துகளின் ஒலிக்கும் காலஅளவை 'மாத்திரை' என்கிறோம். குறில் ஒரு மாத்திரையும், நெடில் இரண்டு மாத்திரையும், மெய் அரை மாத்திரையும் மெய்யைப் போன்றே ஆய்தமும் அரை மாத்திரை அளவைப்பெறுமென அறிவோம். அதனால் ஆய்தத்தை மெய் போல அலகுபெறாதெனக் கொள்ளலாமா?
தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
இக்குறளை அசைபிரிப்போம். மூன்றாம் சீர் மற்றும் நான்காம் சீரைப் பிரித்தால்,
தோன்/றுக /- நேர் நிரை - கூவிளம்
அஃ/திலார்/ - நேர் நிரை- கூவிளம்
'விளம் முன் நேர்' என்ற 'இயற்சீர் வெண்டளை' அமைப்பைப் பெறுகிறது இந்த அசை பிரிப்பில் ஆய்தம் மெய்யைப் போல் அலகு பெறவில்லை.
அலகு பெறாமல் வந்தால் மட்டுமே 'விளம் முன் நேர்' என்ற தளை அமைப்பைப் பெறும். ஓர்அலகு பெறுமாயின் அது நிரை என்ற வாய்ப்பாட்டைக் குறித்து தளை அமைப்பை மாற்றிவிடும்.
இந்த இடத்தில் ஆய்தமானது அலகு பெறாமல் (அஃ) மெய்யைப்போல் செயல்பட்டு நேரசை பெறுகிறது.
அடுத்த குறளைப் பார்ப்போம்.
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு.
இக்குறளில் ஆய்தமானது எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்பதற்கு, மூன்றாம் சீர் மற்றும் நான்காம் சீரைப் பிரித்து தளையமைப்பைப் பார்க்கலாம்.
துண்/க - நேர் நேர் - தேமா
அஃ/துடம்/பு - நிரை நிரை நேர் - கருவிளங்காய்
மேற்கண்ட குறளில் 'மாமுன் நிரை' என்ற 'இயற்சீர்வெண்டளை' அமைப்பைப் பெறுகிறது.(அஃ) என்பது இருகுறில் அமைப்புடன் நிரையசை பெறுகிறது.
முதற்குறளில் மெய் போல அசை பெறாமலும் இரண்டாம் குறளில் உயிர்க் குறில் போல் அசை பெற்றும் இரண்டு தன்மைகளை ஆய்த எழுத்து பெறுகிறது.
இதனால்தான் ஆய்தத்தை மெய்யும் அன்று; உயிருமன்று 'தனிநிலை' என்று கூறினர்.
இக்கருத்தை உணர்ந்து அலகிட்டு வாய்பாட்டில் தளையமைப்பைப் பார்த்தே சீரைப் பிரிக்க கற்றுத்தர வேண்டும்.
எல்லா இடங்களிலும் ஆய்த எழுத்தானது மெய்யைப் போல் அரை மாத்திரை பெற்று அலகு பெறாது எனக் கற்பித்தால்,
துண்/க நேர் நேர் - தேமா
அஃ/துடம்/பு நேர் நிரை நேர் - கூவிளங்காய்
இதில் மா முன் நேர் என்று நேரொன்றாசிரியத்தளை பெற்று வெண்பா இலக்கணத்துக்கு முரணாக அமையும்.
ஓரிடத்தில் மெய் போன்றும்,மற்றோரிடத்தில் உயிர்க்குறில் போன்றும் செயல்படுவதால் ஆய்த எழுத்தை 'அலித்தன்மை கொண்ட எழுத்து'என்கிறார் சங்கரநமச்சிவாயர்.இதை நாகரிகமாக 'தனிநிலை' என்று குறிப்பிடலாம்.
நன்றி
இரா.முருகன்
தமிழாசிரியர்
அரசூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக