பகுபத உறுப்பிலக்கணத்தில் இடைநிலைகள் மட்டும்தான் காலம் காட்டுமா?
உறுப்பிலக்கணம் கற்பிக்கும் போது ஒரு சொல்லைப் பகுத்து பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு உறுப்புகளைக் கற்பிக்கிறோம். இதில் பகுதி காலம் காட்டாத ஏவல் வினையாகவும், இடைநிலை காலம் காட்டக்கூடிய உறுப்பாகவும், விகுதி திணை மற்றும் பால் காட்டக்கூடிய உறுப்பாகவும் கற்பிக்கிறோம்.
அதாவது, காலத்தை காட்டக்கூடிய பணியை இடைநிலை மட்டுமே செய்வதாய் எண்ணுகிறோம்.
காலத்தை பகுதியும் விகுதியும் கூட காட்டும். இந்தப் பதிவில் காலம் காட்டக்கூடிய பகுதிகள் பற்றி காண்போம்.
கு,டு,று என்னும் எழுத்துக்களை ஈற்றில் கொண்ட குறிலிணைப்பகுதிகள் ஒற்று இரட்டித்து இறந்த காலத்தைக்காட்டும்.
காலம் காட்டும் இடைநிலைகள் இல்லையென்றாலும் காலம் காட்டக்கூடிய பணியை பகுதிகளே சில சொற்களில் செய்யும்.
சான்று
தொடு+ஆன்
இதில் காலத்தைக் காட்டக்கூடிய எந்த இடைநிலைகளும் இடம் பெறவில்லை. ஆனால் பகுதி குறிலிணையாக உள்ளது. இறுதியில் 'டு' என்ற எழுத்தை பெற்றிருக்கிறது. தொடு என்ற பகுதியில் ஒற்று இரட்டித்து 'தொட்டு' என்று மாறுகிறது.
தொட்டு+ஆன்(உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் என்னும் விதிப்படி)
தொட்ட்+ஆன் எனவும் (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி)
'தொட்டான்' எனப் புணர்ந்து இறந்த காலத்தை காட்டுகிறது. இதில் காலத்தைக் காட்டக்கூடிய பணியைப் பகுதியே செய்கிறது.
இதனைப் போன்றே
புகு+ ஆன்
பெறு+ ஆன்
என்னும் சொற்களும் பகுதியில் ஒற்று இரட்டித்து இறந்த காலத்தைக் காட்டும்.
எனவே காலத்தைக் காட்டும் பணியை இடைநிலைகள் மட்டும் செய்வதில்லை. மாறாக, சில சொற்களில் பகுதியும் செய்கிறது என உணரலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக